ஜூலை 28, 2015 அதிகாலை.
பறவை இறகு போன்ற மென்மையான
படுக்கை,
மெல்லிய தென்றல் காற்றில்
ஓர் இனிய சுகந்தம்,
மிக
இனிமையாய் பூபாளம் இசைக்கும் வீணை
ஒலி!
யாராக இருந்தாலும் அந்தப் படுக்கை சுகத்தை
விட்டு எழத் தோன்றாது.
உணர்வோடு
கலந்த சுறுசுறுப்புடன் அந்த மனிதர் மெல்லத்
தன படுக்கையை விட்டு எழுந்தார்.
பார்த்தவுடன்
கைகூப்பி வணங்கத் தோன்றும் தீட்சண்யம்
விழிகளில். ஆனால், தோளில் கைபோட்டுப்
பேசத் தூண்டும் எளிய உடல் மொழி!
எழுந்தவருக்கு
ஒன்றும் புரியவில்லை!
இது என்ன இடம்,
நாம் இப்போது எங்கிருக்கிறோம்?
கடைசியாக
சுருக்கென்ற வலியை உணர்ந்த நெஞ்சைத்
தொட்டுப் பார்த்துக்கொண்டார்.
எல்லாம் சரியாகவே இருந்தது.
ஆனால்,
இப்போது நாம் மேகாலயாவிலல்லவா இருக்கவேண்டும்?
இந்த இடம் அப்படித் தோன்றவில்லையே,
ஏதோ சொர்க்கலோகம் போலல்லவா தோன்றுகிறது?
நேற்று ஆரம்பித்த உரையை
முடித்த நியாபகம் இல்லையே!
என்ன நடந்தது?
மண்டைக்குள்
ஓடிய ஆயிரம் கேள்விகளை,
வெள்ளிக்கம்பிகள்
போர்த்த தலையை ஆட்டி விரட்ட
முயன்றபோது அந்த மனிதர் உள்ளே
நுழைந்தார்!
"அஸ்ட்ரோ
கிரகத்துக்கு உங்களை மகிழ்வோடு வரவேற்கிறோம்!"
இது என்ன கனவா? கடைசியில்
நாமும் கனவு காண ஆரம்பித்துவிட்டோமா?
"இல்லை நண்பரே, இது கனவில்லை"
- அவர் உள்ளத்தைப் படித்ததுபோல் பேச ஆரம்பித்தார் வந்தவர்.
"ஐயா, தாங்கள் வந்திருப்பது அஸ்ட்ரோ
கிரகத்திற்கு! நான் அதன் தலைவன்.
நேற்றிரவு, தங்களை சிறிது அவசரப்பட்டு
இங்கு கொண்டுவர நேர்ந்ததற்கு மன்னிக்கவும்.
தாங்கள்
இளைப்பாறி, குளித்து முடித்து வாருங்கள். நான் உணவு மேஜையில்
உங்களுக்காய்க் காத்திருக்கிறேன்."
சொன்னவாறு
நகர்ந்தவருக்கு வயதை அளவிடமுடியவில்லை! இருபதிலிருந்து
இரண்டாயிரம் வரை எதுவாக வேண்டுமானாலும்
இருக்கலாம் என்று வினோதமாகத் தோன்றியது.
காலைக்
கடன்களை முடித்து, பிடித்தமான நீல நிறத்தில் தயாராக
வைக்கப்பட்டிருந்த உடைகளை அணிந்து வெளியே
வந்தவரை ஒரு சிறிய குழு,
பூங்கொத்துடன் வரவேற்றது!
தலைவர்
என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டவர், "இவர் எங்கள் தலைமை விஞ்ஞானி
சுகா! இவர் எங்கள் மக்கள்தொகை
காப்பாளர்" என்று ஒவ்வொருவராக அறிமுகம்
செய்துவைத்தவர்," வாருங்கள் சாப்பிட்டுக்கொண்டே பேசுவோம்" என்று கைபிடித்து அழைத்துச்
சென்றார்.
மேஜையில்
ஆவி பறக்க மல்லிகைப்பூ போல
இட்லி!
"உங்களுக்கு
வீணை இசை பிடிக்கும், சற்றே
வாசிக்கவும் செய்வீர்கள் என்று அறிவோம். அதுபோல்
இட்லியும்" என்று புன்னகைத்தார்!
சாப்பிட்டுக்கொண்டே
மெதுவாகப் பேச ஆரம்பித்தார்!
"நீங்கள்
யூகித்தது சரிதான் எனக்கு வயது
உங்கள் பூமி வருடங்களில் இரண்டாயிரம்!
இந்த கிரகத்தில் போட்டி, பொறாமை, வஞ்சம்,
வருத்தம், துன்பம் என்ற எந்த
உணர்ச்சிகளும் இல்லை!
இங்கு இன்பமும் இனிமையும் மட்டுமே!
தனக்கு விதிக்கப்பட்ட நாட்களை
இனிமையாய்க் கழித்து, காற்றில் ஒருவர் கரைந்தபிறகே வேறு
ஒரு உயிர் ஜனிக்கும்! இந்த
ஒழுங்குமுறைபற்றி சுகா பின்பு உங்களுக்கு
விளக்குவார்!
எங்கள்
ஒருநாள் என்பது உங்கள் பூமியின்
ஒரு வருடம்!
இந்த அண்டத்தில் மிக அமைதியும் சாந்தமும்
நிலவும் கோள் எங்களது!
எங்களுக்கு
எல்லா உயிரினங்களின் பாஷையும் தெரியும்!"
இதுவரை
எங்கள் கிரகத்துக்கு எந்த உயிரினத்தாலும் இடர்
வந்ததில்லை.
எங்கள் ஒரே அச்சம்,
உங்கள் பூமியும் அதில் வாழும் மனிதர்களும்.
அதிலும்
இந்த இந்தியர்கள் மீது எங்களுக்கு கொஞ்சம்
பொறாமையே உண்டு.
என்றேனும்
நாங்கள் யாராலாவது வெல்லப்படுவோம் என்றால் அது அவர்களால்தான்
என்று என் உள்மனம் சொல்கிறது.
அதற்கேற்றாற்போல்
எத்தனை இடர் வந்தாலும், அன்னியருக்கு
அடிமையாய் பல நூற்றாண்டுகாலம் கிடந்தாலும்,
அந்த தேசம் புத்துயிர் பெறுகிறது!
மற்ற நாட்டு மக்களை எங்களால்
இங்கிருந்தே சில எல்லைகளுக்குள் வசப்படுத்தி
வைக்க முடிகிறது.
மது, மதம், வறுமை என்று
எத்தனை களைகள் மண்டினாலும், அந்த
இந்திய மண்ணில் அவ்வப்பொழுது ஒரு
விருட்சம் தோன்றிக்கொண்டே இருக்கிறது - உங்களைப்போல!
வேறு எந்த நாடாக இருப்பினும்
இத்தனை அரசியல் அவலங்களைத் தாண்டியும்
இன்னும் அமைதிப் பூங்காவாக இருக்கமுடியாது!
ஞானிகளும், சித்தர்களும் பிறந்து வாழ்ந்த அந்த
மண்ணின் வீரியம் எங்களை அச்சுறுத்துகிறது!
எல்லையில்லாத
இளமை வளம்,
உலகுக்கே அறிவை
விநியோகம் செய்யும் ஞானம்!
எந்தத் துறையிலும்
முதலிடம் பிடிக்கும் அறிவுவளம்!
இவை எங்களைக் கொஞ்சம்
பயமுறுத்தத்தான் செய்கின்றன!
காய்ந்த
சுள்ளிகளைப் போல் அந்த தேசமெங்கும்
சிதறிக்கிடக்கும் இளைஞர் பட்டாளத்தைப் பற்றவைக்க,
உங்களைப்போல் ஒரு சுடர் போதும்.
அந்தக் காரியத்தை நீங்கள் தளராது செய்ததுதான்,
உங்களை இங்கே கொணர வைத்தது!
உங்களுக்குமுன்
நாங்கள் கொணர்ந்த விவேகானந்தர், காந்தி, பாரதி, போஸ்,
பட்டேல் போன்ற பலரிடமும் நாங்கள்
ஒரு வேண்டுதல் வைத்தோம்.
அதை இப்போது உங்களிடம்!
என் ஆயுள் இன்னும் சில
வருட காலமே!
அதன்பிறகு, இந்த
கிரகத்தை என் இடத்தில் இருந்து
நீங்கள் வழிநடத்த வேண்டும்.
"உங்களுக்குத்
தேவையான ஆராய்ச்சிக்கூடம், உங்கள் விருப்பப் புத்தகங்கள்,
வீணை, இசை என அதுவரை
உங்கள் பொழுதை இனிமையாகக் கழிக்க
எல்லா வசதிகளும் உங்களுக்கு இங்கு இருக்கிறது!
இந்த என் வேண்டுகோளை நீங்கள்
ஏற்கவேண்டும்!
நான் முதலில் சொன்னதுபோல் இந்த
கிரகத்தில் எதிர்மறை எண்ணங்களோ, வருத்தமோ இருக்கக் கூடாது என்பதாலேயே என்னால்
உங்களுக்குக் கட்டளை இட முடியவில்லை-
என் வேண்டுதலை ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்."
குழந்தை
போன்ற புன்னகையோடு அந்த மனிதர் கேட்டார்
- "இதில் என் விருப்பம் என்று
ஒன்று இருக்கிறதா? என் நோக்கம் நிறைவேறுமுன்,
என் 2020 இலக்குக்குமுன் இங்கு என்னை அறியாமல்
கொண்டுவந்தபிறகும் எனக்கு நீங்கள் வேறு
என்ன வாய்ப்பை வழங்கமுடியும்?
எனக்குமுன்
நீங்கள் கொண்டுவந்த என் தலைவர்கள் எங்கே?
தலைவர்
புன்னகையோடு சொன்னார்.
அவர்களைப் பற்றி பிறகு பேசுவோம்.
இப்போது
உங்களுக்கு மூன்று வாய்ப்புகள்!
உங்கள்
முன்பிருக்கும் சிகப்பு பட்டனை அழுத்தினால்,
உங்கள் எண்ணங்கள் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து,
நீங்கள் எங்கள் தலைவனாக, ஒரு
நிம்மதியான உயர்வான வாழ்க்கையை இன்னும்
பத்தாயிரம் பூமி ஆண்டுகள் வாழலாம்.
அந்த பச்சை பட்டனை அழுத்தினால்,
உங்கள் மதம் சார்ந்த நம்பிக்கையின்படி,
சொர்க்கமோ, நரகமோ, மறுபிறப்போ, முக்தியோ
எதையும் அடையலாம்.
மூன்றாவதாக
இருக்கும் வெள்ளை பட்டன் சற்றே
துயரமான முடிவைத் தரவல்லது.
அதை அழுத்தினால், உங்கள் பூமிக்குமேல் ஒரு
நட்சத்திரமாக நீங்கள் நிலை பெறுவீர்கள்!
உங்கள் விழிகள் எப்போதும் நீங்கள்
நேசித்த இந்தியாவின் மீதே இருக்கும்.
இந்தியா
வல்லரசாவதையும், இந்தப் பிரபஞ்சத்தையே ஆளுவதையும்
பார்க்கும்வரை நீங்கள் அப்படியே இருக்க
நேரும்.
அந்த முதிய குழந்தை மெதுவாகச்
சொன்னது.
"என் சகோதர உயிரினங்கள் துன்பத்தில்
உழலும்போது எனக்கு இங்கு சுகவாழ்க்கை
வாழ சம்மதமில்லை!
மதம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை!
அது ஒரு வாழும் நெறி
என்பதுதவிர,
அது மனிதர்களைப் பிரிப்பது
எனக்கு சம்மதமில்லை!"
தலைவர்
புன்னகையோடு சொன்னார்!
மதம் சாப்பாட்டில் உப்பைப்போல
அளவோடு இருப்பது சுகம்.
நீங்கள்தான் பூமியில் அளவிற்கு மீறி அதைச் சேர்த்துக்கொண்டு,
மற்றவர்களைக் கரித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
இப்போது
உங்கள் சாய்ஸ் எனக்கு விளங்கிவிட்டது!
இது எனக்கு ஏமாற்றமாக இருந்தாலும்,
ஆச்சரியமாக இல்லை!
என்னை இந்தியர்களின் தேசபக்தி எப்போதும் வியக்க வைக்கிறது!
உங்களுக்கு
முன் வந்த இந்தியத் தலைவர்கள்
தேர்ந்தெடுத்தவழியே உங்கள் விருப்பமாகவும் இருப்பது
எங்களுக்கு வருத்தமே!
ஆனால் எங்கள் கிரகத்து விதிப்படி,
உங்களை கட்டாயப்படுத்த எனக்கு அதிகாரமில்லை.
புன்னகையோடு
அந்த மனிதர் வெள்ளை
பட்டனை அழுத்தினார்.
இந்தியாவின்
தென்கோடி முனைக்கு நேர்மேலே புதிதாகப் பிரகாசித்த நட்சத்திரத்துக்கு இந்திய விஞ்ஞானிகள்
அப்துல்
கலாம் என்று பெயரிட்டபோது
அந்த
நட்சத்திரம்
கண்சிமிட்டிச் சிரித்துக்கொண்டது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக