ஏன்டா இப்படி செஞ்சே?
காலைல பாக்க வந்தப்ப அம்மா இதை நூறாவது தடவையாகவோ, ஆயிரமாவது தடவையாகவோ கேட்டுச்சு!
பாவம்! நைட்டு ஃபுல்லா தூங்காம கெடந்து காலைல வந்து க்யூல நின்னு ஜெயில்ல பாக்க வந்தவளுக்கு அழுகை முட்டிக்கிட்டு வருது. ராஜா மரம் மாதிரிதான் நின்னான்! இப்போ மட்டுமில்லை இந்த ஒரு மாசமா அப்படித்தான் இருக்கிறான்.
இன்னைக்கு வந்த அம்மா வேற இன்னொரு விஷயம் சொல்லி அழுதுட்டுப் போச்சு . நேத்து சாயங்காலம் இருட்டு வேளைல ப்ளஷர் கார்ல வந்து யாரோ அஞ்சு லட்ச ரூபாய் குடுத்துட்டுப் போயிருக்கறாங்க!
பேச்சு மாறும் பழக்கம் எங்க ஜாதிக்கே இல்லை!
அவன் இன்னைக்கு வரைக்கும் வாயே தொறக்காம இருந்ததுக்கு இந்தப் பணம்! இப்போ மட்டுமல்ல எப்போதுமே அவன் வாயே திறக்கக்கூடாது. கேஸை நாங்க பார்த்துக்குவோம்! குறைவான தண்டனையோட அவன் வெளியே வருவது எங்கள் பொறுப்பு.
எங்களுக்கு எதிரா அவன் வாயத் திறந்தா, உங்க வீட்டுல ரெண்டு பொண்ணுங்க இருக்கு நியாபகம் இருக்கட்டும்!”
போனவாரம்
அந்த மதத்து ஆட்கள் வந்து
பணம் கொடுத்திருக்கறாங்க, “எங்க பையனை காட்டிக்
கொடுக்கக்கூடாது அதுக்குத்தான் இது!”
“நான் என்ன பண்ணட்டும்? தெருவுல
நடக்கவே அவமானமா இருக்கு!
இப்போ இதெல்லாம் வெளியே தெரிஞ்சா இன்னும்
அசிங்கமா போய்டும்! கடைசில காசுக்காகவா இப்படி
பண்ணுனே?
குடும்பத்துக்கு
ஒரே பையன்! இது தெரிஞ்சும்
ஏன்டா இப்படி செஞ்சே?”
“உண்மையிலேயே
என்னதான் நடந்தது?”
அம்மா போனதுக்கப்புறமும் அதுதான் அவன் மனசுல
ஓடிக்கிட்டே இருந்தது!
ஏன் இப்படி செஞ்சேன்? இதை
நான்தான் செஞ்சேனா?
உண்மையில்
என்னதான் நடந்தது?
சாயங்காலம்
வரைக்கும் இப்படியே உலாத்தலாம்!
ஆறு மணிக்கு ரோல்கால்.
அது
முடிஞ்சு செல்லுக்குள்ள அடைக்க வரைக்கும் என்ன
செய்ய?
நேத்து
பொறுக்க முடியாம வார்டன் ரூமுக்கே
போய் எனக்கு ஏதாவது வேலை
கொடுங்க சார்ன்னு கேட்டா, விசாரணைக் கைதிக்கு
வேலை கொடுக்க முடியாது.
வேணும்னா
சாமியார் செல்லுக்குள்ள போய் பேசிக்கிட்டு இருன்னு
சொன்னார்!
அது யார் சாமியார்ன்னு ரமேஷ்
கிட்ட கேட்டா, அந்த ஆளும்
ஒரு கொலை செஞ்சுட்டு உள்ளே
வந்தவர்தான்!
குற்றத்தை ஒத்துக்கிட்டு ஏழு வருஷ தண்டனை
வாங்கிக்கிட்டு உள்ளே வந்தவர்!
ரெண்டு
வருஷமா தாடியும் மீசையுமா தானுண்டு தன வேலை உண்டுன்னு
இருக்கார்! அவ்வப்போது கைதிகளை கூப்பிட்டு அறிவுரை
சொல்லுவார்!
மாசம் ஒருதடவை ஒரு அம்மா
வந்து பார்த்துட்டு, அவர் கணக்குல பணம்
கட்டிட்டுப் போகும்!
எந்தநேரமும்
ஏதாவது படிப்பு, அதை விட்டால் கண்ணை
மூடி தவம் செய்யற மாதிரி
உட்கார்ந்திருப்பார்!
வார்டன்
கார்டு எல்லோருமே அந்த ஆள் கிட்ட
மரியாதையாத்தான் பேசுவாங்க!
இன்னைக்கு
இருக்கற மனசுக்கு ஏனோ அந்த ஆளைப்
போய் பார்க்கலாம்ன்னு தோணுச்சு!
நல்லவேளையா போனப்ப அந்த ஆள்
தரைல உட்கார்ந்து ஒரு புத்தகம் படிச்ச்சுக்கிட்டு
இருந்தார்!
ஐயா உள்ளே வரலாமா?
புத்தகத்த
மூடி வெச்சுட்டு ஒரு நிமிஷம் உத்துப்
பார்த்தார்!
வா தம்பி! நீதானே ராஜா?
உட்கார்!
சொல்லு, ஏன் இப்படி செஞ்சே?
நீங்களுமா?
எனக்கே
தெரியல. இன்னைக்கு வரைக்கும் அது எனக்கே குழப்பமாவே
இருக்கு!
அந்தப்
பொண்ணு என்கிட்ட நல்லாத்தான் பேசுச்சு! எனக்குத்தான் ஏதோ நடந்துருச்சு போல!
இன்னைக்கு
எல்லோரும் சொல்றமாதிரி அந்தப் பொண்ண நான்
லவ் பண்ணுனேன்னு கூட என்னால நம்ப
முடியல!
தினமும்
அந்தப் பொண்ணுகூட நடந்து வரும்போது, என்ன
தம்பி பண்றீங்கன்னுதான் கேட்கும்!
பேசிக்கிட்டே
நடந்துவந்து டீக்கடைல உட்கார்ந்துக்குவேன்!
ரயில்வே
ஸ்டேஷன் படி ஏறும்போது திரும்பிப் பார்த்து கை அசைச்சுட்டுதான் போகும்!
அதுதான்
வினையாய் போச்சு!
எல்லாப்
பயலும் ஏத்தி விட ஆரம்பிச்சாங்க!
பாப்பாரப்
புள்ளை என்னை எங்கடா லவ்
பண்ணப் போகுது?
அதுவும்
அது இருக்கற பவுசுக்கு நான்
ஏணி வெச்சாக்கூட எட்டாது!
அதும் இல்லாம அது ஏதோ
பாய் பையன லவ் பண்றதா
வேற சொல்றாங்க!
நான் சொன்ன எதுவும் அவங்க
காதுல ஏறல ஆனா அவங்க
ஏத்திவிட்ட எல்லாமே என் மனசுல
நல்லா ஏறி உட்கார்ந்துக்கிச்சு!
ஒருநாள்,
அந்தப் பெண்ணிடம் தைரியமா என் காதலைச்
சொல்லிட்டேன்.
உன் மூஞ்சியை நீ கண்ணாடில பார்த்ததே
இல்லையான்னு நக்கலா சிரிச்சுட்டுப் போய்டுச்சு!
எனக்கு
நாக்கை பிடுங்கிட்டு சாகலாம்ன்னு தோணிச்சு!
அன்னைக்குத்தான்
முதல் தடவையா தண்ணியடிச்சேன்!
அவளைக்
கொல்லாம விடமாட்டேன்னு சொன்னப்பத்தான் ஒருத்தன் எனக்கு லைன் போட்டுக்
கொடுத்தான்!
அன்னைக்கு
போன்ல பேசுனவர் அவளைக் கொன்னா பத்து
லட்சம் தர்றதா சொன்னார்!
அதோட கேஸையும் தானே பாத்துக்கறதா சொன்னார்!
ஏன்னு கேட்டா துலுக்கப் பயலைக்
கட்டிக்கிட்டு என் ஜாதி மானத்த
கப்பலேத்தப் பார்க்கற நாயை கொல்லாம
விடமாட்டேன்னு சொன்னார்.
ஆச்சர்யமா, மறுநாள் வேற ஒரு
சின்ன வயசு ஆள் என்னை
வந்து பார்த்தார். சாந்தியை கொல்லப்போறேன்னு சொன்னாயாமேன்னார்!
ஆமாம்,
அதைப்பத்தி உனக்கென்னன்னு கொஞ்சம் வீரப்பா கேட்டேன்.
திருநெல்வேலிக்காரனாச்சே!
அப்பத்தான்
அந்த ஆளும் அதே சொன்னார்!
“கொன்னுடு!
என்னை ஏமாத்திட்டு அப்பன் சொல்றவனை கட்டிக்கப்
பார்க்கறா! அவளை உயிரோட விட
நான் மடையனில்லை!
உனக்கு
என்ன வேணுமோ அதை உங்க
ஊர்லயே எங்க ஆளுங்க செய்வாங்க”ன்னு
சொல்லிட்டுப் போய்ட்டார்!
இத்தனை
பேர் அவமேல வெறியா இருக்காங்க!
அதுனால யார் கொன்னாங்கன்னு யாருக்கும்
தெரியப்போறதில்லைன்னு கூட தண்ணியடிக்க வந்த
பசங்க சொல்லசொல்ல எனக்கு தீர்மானமா தோண
ஆரம்பிச்சுருச்சு! அப்போதான் அந்த மொதநாள் போன்
போட்டுக் கொடுத்த பையன் சொன்னான்!
“திருநெல்வேலில
பொறந்துட்டு அரிவாள் எடுக்க இவ்வளவு யோசிக்க
வெட்கமா இல்லையா?”
“செய்றண்டா! இன்னும் ஒருவாரம்!”
மறுநாள்
யாரோ கொண்டுவந்து பொறுப்பாக் கொடுத்த அரிவாள் நல்லா
பதமா இருந்துச்சு!
“ஸாரிக்கா”ன்னு
மறுநாள் போய் நல்ல பையன்
மாதிரி சொன்னேன்!
அப்பவும்
அந்தப் பொண்ணு சிரிச்சுக்கிட்டே பரவால்ல
தம்பின்னு சொல்லிட்டுப் போச்சு பாவம்!
அன்னைக்கு
காலைல ரயில்வே ஸ்டேஷன்ல கூட்டமே
இல்லை!
பக்கத்துல
போய் உட்கார்ந்தேன்!
பேசிக்கிட்டே
பையில கை விட்டேன்!
அரிவாளைப்
பார்த்து அந்தப் பொண்ணு சுதாரிக்கறதுக்குள்ளே
ஒரே போடு!
பாவம்!
வாயிலேயே விழுந்தது வெட்டு!
என் மூஞ்சில பட்டுத் தெறிச்சுப்போச்சு
ஒரு பல்லு!
நிதானமா
நடந்தே ரூமுக்கு வந்துட்டேன்!
இதுதான்
நடந்தது!
கொஞ்சம்
கூட சலனமே இல்லாமல்தான் சொன்னான்
ராஜா!
ஆனா அந்தப் பொண்ணை
நான்
மட்டும்தானா
கொன்னேன்?
எனக்கு அவ்வளவு தைரியம்
கிடையாது!
மெதுவாகப்
பேச ஆரம்பித்தார் சாமியார்!
“உண்மைதான்
இது நீ ஒருத்தன் செய்த
கொலை அல்ல!
இது காலகாலமாய் நடக்கும் கொலை!”
“பல யுகங்களாய், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
நடக்கும் கொலை இது!”
பெண் என்பவள் நம் சமூகத்தில்
வெறும் பொருளாகத்தான் பார்க்கப்பட்டிருக்கிறாள்!
புனிதம் என்று
பூஜித்தே
பெண்ணைக்
கொன்றிருக்கிறது
இந்த
சமூகம்!
பெண்ணுக்காகவே போர்கள்,
பெண்ணைக்
கைப்பற்றவே
யுத்தங்கள்!
எத்தனை
ரத்தம் சிந்தியது இந்த பூமியில் பெண்ணுக்காக?
பெண்ணை என்றைக்கு சக
உயிராகப் பார்த்தது இந்த ஆணாதிக்க சமூகம்?
பெண் புனிதமானவள்!
கற்பு என்ற கற்பிதம்
பெண்ணுக்கு
மட்டுமே!
பரத்தை வீட்டுக்கு ஆணைத் தூக்கிச் சென்றவள் பெண்!
பரத்தை வீடு சென்று பொருள் இழந்து வந்தவனுக்காக ஊரையே எரித்தவள் பெண்!
தீக்குளித்து கற்பை நிரூபித்தவள் தெய்வப்பெண்!
அம்மா சொன்னதால் ஐந்துபேர் பங்கிப் புசிக்கும் பண்டம் பெண்!
இதைத்தான் போதித்து
வளர்க்கிறோம்
நம்
பள்ளிகளில்!
அதுவும்
இப்போதைய காலகட்டம் இன்னும் கொடுமையானது!
இது ஒரு ட்ரான்சிஷன்
பீரியட்!
வீட்டுக்குள்
அடங்கிக்கிடந்த பெண் இன்று எல்லாத்
துறைகளிலும் பாதம் பதிக்க, காலம்
காலமாக படி தாண்டாத பத்தினி
கதைகள் படித்து வளர்ந்த ஆண்களால்
அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை!
அவள் சம்பாரித்துக் கொண்டுவரும் காசு வேண்டும்!
ஆனால் அவள் என் ப்ராப்பர்டி
என்பதையும் அவள் மறக்கக்கூடாது!
பெண்ணோடு
வரும் மோதல்களில் முதலில் சீண்டப்படுவது அவள்
கற்புதான்!
இந்தக்
கீழான மனநிலைக்கு தீனி போடத்தான் உங்கள்
இன்றைய ஒரே அறிவுச் சுரங்கம்
சினிமா!
படிக்கும்
பழக்கம் வழக்கொழிந்து போன சமுதாயத்துக்கு இன்றைக்கு
அறிவுத் தீனி போடுவது உங்கள்
சினிமாதானே?
கொஞ்சம்கூட
சமூகப் பொறுப்பில்லாமல், ஒரு பெண்ணை சீண்டுவதும்,
கற்பழிப்பதும்தான் ஆண்மை என்பதும்,
ஆண்
எத்தனை கொடுமை செய்தாலும் அதைப்
பொறுத்துக்கொள்வதும், அவனைத் திருத்தத் தாலி
கட்டிக்கொள்வதும்தான் பெண்மை என்பதுவும்தானே உங்கள்
திரைப்படம் உங்களுக்குச் சொல்லிக்கொடுத்த நாகரீகம்!
அன்றைக்கு
மேஜர் சுந்தரராஜனும், சௌகார் ஜானகியும் "களங்கப்பட்ட"
தன் மகளை குறைபட்டு வந்துட்டயேடி
ன்னு சொல்லி அழுததுகூட ஒரு
நியாயம்!
ஆனால்,
என்னவோ பெரிய நாகரீகம் முற்றிவிட்ட
காலத்திலும், உங்கள் இளவரசுவோ சரண்யாவோ
இன்னும் ஏன் காதலில் தோற்ற
தன மகனை இந்தக் கேள்வியைக்
கேட்பதில்லை?
நீ வான்னு சொன்னா வரணும். உட்கார்ன்னு சொன்னா படுக்கணும்! அவள்தான் நல்ல பெண்!
சில நூறு கிராம்
சதை
இடம்
மாறி
வளர்ந்திருப்பது
தவிர
ஆண்
பெண்ணைவிட எந்தவகையில்
உயர்ந்துவிட்டான்?
உங்கள் ஆசைக்கு இணங்க மறுத்தால் நீங்கள் கொல்லுவீர்கள், உங்களைக் காதலித்தால், அவளைப் பெற்றவன் கொல்லுவான்!
வெட்கம்
கெட்ட உங்களோட குடும்பத்தின், ஆண்மையின்,
ஜாதியின் பெருமை ஒரு பெண்ணால்தான்
காக்கப் படவேண்டும்!
அதை மறுதலித்து, தன் ஆசைகளை ஒரு
பெண் நிறைவேற்ற நினைத்தால் ஒழுக்கம் கெட்டவள்!
அவளைக்
கொன்று உங்கள் வீரத்தை, ஜாதியை
காப்பாற்றிக்கொள்வீர்கள் அப்படித்தானே தம்பி?
பெண்ணின் தேவைகளுக்கு
சம்பாதித்துக்
கொடுத்து,
அவளை
நிழலோடு
பாதுகாத்துக்
காப்பாற்றிய
பேராண்மை
இப்போது
டாஸ்மாக்கில்
உருண்டு
கிடக்கிறது!
பெண் படித்து, சம்பாதித்துக் கொண்டுவந்து கொடுக்கும் காசில் சாப்பிடும்போது வராத
வெட்கமும் ரோஷமும், தனக்கான வாழ்க்கையை அந்தப்பெண்
தீர்மானித்துக்கொள்ளும்போது
வருகிறது!
ஆபீஸில்
மேலதிகாரி பெண்ணென்றால் “மேடம்
மேடம்” என்று குழையத் தயாராகிவிட்ட
உங்கள் ஈகோ உங்கள் வீட்டுப்
பெண்ணின் உயர்வை, விருப்பத்தை மட்டும்
ஏற்றுக்கொள்ள மறுக்கிறது!
வேறு வழியே இல்லாமல் பெண்ணை
எல்லா இடத்திலும் ஏற்றுக்கொள்ள முடிந்த உங்களால் இன்னும், இன்று இல்லாமலே போய்விட்ட உங்கள் ஆளுமையை அசைத்துப்
பார்ப்பதை மட்டும் ஏற்றுக்கொள்ளாத முட்டாள்தனம்தான்
இன்றும் பெண்ணை ஒரு போகப்
பொருளாகவே பார்க்கச் சொல்கிறது!
உங்கள் விருப்பத்தை மீறும்போது
அவள்
மகளாக,
காதலியாக,
தோழியாக
யாராக
இருந்தாலும்
பெண்
என்பதாலேயே
கொல்லப்பட
வேண்டியவள்!
பெண் என்பதால் அவள் விருப்பப்படி வாழும்
உரிமை மறுக்கப்படும்!
அதைக் கேள்வி கேட்டாலோ, மீறத்
துணிந்தாலோ சந்தேகமே இல்லாமல் கொல்லப்பட வேண்டியவள் பெண்!
அதனால்தான் கொன்றவன்
ஜாதியோ,
கொல்லப்பட்டவள்
ஜாதியோ,
மதமோதான்
விவாதிக்கப்படுகிறதேயன்றி,
பெண்
கொல்லப்படவேண்டியவள்தானா
என்பதை
யாரும்
விவாதிப்பதே
இல்லை
- உங்கள்
வெட்கம்
கெட்ட
ஊடகங்கள்
உட்பட!
இந்தக் கேடுகெட்ட
அமைப்பில் ஒரு கருவிதானே நீ!
இப்போது இந்த சிறைவாசம் உனக்கு
யோசனை செய்யும்
கால அவகாசத்தைக்
கொடுத்திருக்கிறது!
நீயாகக் கொன்றாயோ,
எவனாவது தூண்டிவிட்டுக்
கொன்றாயோ அது உனக்குத்தான் தெரியும்!
தண்டனையிலிருந்து தப்பிக்க
கழுத்தை அறுத்துக்கொள்வதைவிட, இந்தக் கால அவகாசத்தில் இந்த அமைப்பின் கழுத்தை
அறுக்கும் வழிமுறையை
யோசி!
உன் பாவத்தின்
அழுக்கை அன்பால்
கழுவு! பெண்ணும்
உன்னைப்போல் ஒரு சக உயிர்
என்பதை ஒரு நூறு பேருக்காவது
புரியும்படி சொல்!
இத்தனை தூரம்
அன்பைப்பற்றிப் பேசும்
நீங்கள் கூட ஒரு கொலை செஞ்சுட்டுத்தான் ஜெயிலுக்கு
வந்தீங்களாமே! அப்புறம்
என்ன இப்படி
ஒரு சாத்தான்
ஓதும் வேதம்?
ஒரு நிமிஷம்
அமைதியாக உட்கார்ந்திருந்த
சாமியார்ன்னு எல்லோரும்
கூப்பிடுற ரவி, நிதானமாகச் சொன்னார்!
ஆமாம்! நானும் ஒரு உயிரைக் கொன்றேன்!
அதுவும்
ஒரு புனிதமான
தொழில் செய்யும்
டாக்டரை!
இடுப்புக்குக் கீழே இருக்கும் உறுப்பை
எட்டுத் துண்டாய்
வெட்டி!
அது கொலை அல்ல! வதம்!
தன் தொழில் தந்த புனிதமான அனுமதியை தவறாக உபயோகித்து வெவ்வெறு காலகட்டத்தில் எட்டுப் பெண்களின் வாழ்க்கையை அழித்து, அவர்களின் தற்கொலைக்கும் அந்தக் குடும்பங்களின் சீரழிவுக்கும் காரணமான அரக்கனை அழித்த வதம்!
ஏன் சாமியாரே, நீங்கள் போதித்த அன்பும்
சட்டமும் அங்கு செல்லாதா? அவனை
வதம் செய்ததால் தலைவனை இழந்து அவன்
குடும்பம் சீரழியாதா?
இல்லை!
அது அன்புக்கு அடங்காத மிருகம்!
அது கடைசியில் தன் மகளுக்கு நிகரானவளையும்
பெண்டாளத் துணிந்தபோது வேறு வழியில்லாமல் செய்த
வதம்!
இன்றும்
அதற்கான நன்றிக்கடனாக, எத்தனை முறை நான்
மறுத்தும், எனக்கு மாதம் தோறும்
பணம் செலுத்துவது யார் தெரியுமா?
சீரழிந்து
போகும் என்று நீ சொன்னாயே
அந்தக் குடும்பத் தலைவி, அவன் மனைவியான
மருத்துவர்!
இது, அந்த வதத்துக்கு
அவரே
தன்
விருப்பத்தில்
வழங்கும்
காணிக்கை!
மௌனமாகத்
திரும்பி நடந்த ராஜாவுக்கு, தலைவலி
தீர அப்போதே ஒரு பீடியாவது பிடிக்கவேண்டும்
என்று தோன்ற,
ஜெயிலில் பகிரங்க
ரகசியமாக பீடி சிகரெட் விற்கும்
பாண்டியைத் தேடிப்போனபோது, ஜெயில் டிவி ரூமில்
அவன் அபிமான ஹீரோ பாடிக்கொண்டிருந்தார்!
"அடிடா அவளை, வெட்றா அவளை!"
No comments:
Post a comment