ஜனநாயகம்
வென்றது!
இப்படித்தான்
சொல்கிறது இணையம்!
கர்நாடக
தேர்தல் ஆரம்பித்தபோதிலிருந்து எனக்கு அப்படி ஒன்றும் அதில் சுவாரஸ்யம் இருக்கவில்லை!
எடப்பாடி ஸ்வாமிகள் ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடும்போது, ஓடாத காவிரியைப்பற்றி கவலைப்பட்டு ஆவதென்ன என்று கண்ணில் கிடைத்த கோவிலில் பழனிசாமி பேருக்கு அர்ச்சனை செய்துகொண்டு கிராமத்தில் ஒருநாள் என்ற கலாச்சர நிகழ்ச்சியை மெய்மறந்து ரசித்து அனாடமி கற்றுக்கொண்டிருந்தேன்!
விளம்பர
இடைவேளையில் என்னதான் நடக்கிறது என்று பார்க்க செய்தி சேனலை மேய,
அட, நம்ம ஆப்கிபார்!
ஏதோ ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தார்!
பீல்டு
மார்ஷல் கரியப்பா வீட்டு குழாய்த்தண்ணீரை நேரு எப்படி தடுத்து நிறுத்தினார் என்பதை கேட்டபோது அவர்
பேரனின் பிள்ளை நாளை எல்லையில் நம் ராணுவவீரர்களை எப்படி கொடுமைப்படுத்துவார் என்ற கவலையில் அன்று இரவு தூக்கமே இல்லை!
மறுநாள்
எல்லா சேனலில் செய்தித்தாள்களிலும் கரியப்பா கதையில் கரி பூசியபோதுதான் தெரிந்தது பயபுள்ள பிரதமரானாலும் சரித்திரம் படிக்க முயலவோ, பொய் சொல்லக் கூசவோ இல்லை என்பது!
நாளை
தமிழ்நாட்டில் நடக்கப்போகும் தேர்தலில், கட்டபொம்மனை நேரு எப்படி சூழ்ச்சி செய்து காட்டிக்கொடுத்தார், வீர்சவார்கர் எப்படி தீரமாய் அதை எதிர்த்தார் என்ற சுவாரஸ்யமான கதை நமக்குத் தெரியவரும்!
கூடவே, அவருக்கு இணையான இன்னொரு வரலாற்றுப்
பேரறிஞர் ரஷ்யாவில் ஏகே 74 துப்பாக்கி வாங்கிக்கொடுத்து பிரபாகரன் என்ற தீவிரவாதியை தான் நெறிப்படுத்திய கதையை சொல்லும்போதுதான் எங்காவது வேறு மாநிலத்துக்கு வந்தேறியாய் போய்விடலாம் என்று தோன்றும்!
விடுங்கள்.
அதற்கு இன்னும் சமயம் இருக்கிறது!
ஆனால்
அதற்குப்பிறகு கர்நாடக தேர்தல் கூட்டங்களை பார்க்க நான் தவறவில்லை!
எப்போதுமே என்போன்ற குடிமக்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாத மோடிஜி, சிவாஜிகணேசன் எவ்வளவு மோசமான நடிகர் என்பதை ஒவ்வொரு கூட்டத்திலும் நிரூபித்தார்! அதிலும், என்னிடம் மோதாதீர்கள்- நான் மோடி என்று வீரவசனம் பேசியபோதும், தான் கனவு காணும் இந்தியாவை நேரு எப்படியெல்லாம் சிதைத்தார் என்று கண் கலங்கியபோதும், நாம் எத்தனை ஆஸ்கர்களை அறியாமல் இழந்து ஒரு மகாநடிகனை டீ விற்கவும், நாடாளவும்
உபயோகப்படுத்தியிருக்கிறோம்
என்பது புரிந்தது!
இப்படி
இருந்தால் ஆயிரம் மோடிகள் வந்தாலும் நாடு வல்லரசாகாது!
மோடியின்
மாறுபட்ட நடிப்பில், எடியூரப்பா, சீதாராமையா (ஆனால் சும்மா சொல்லக்கூடாது, மோடிக்கு இந்த மனிதரின் ஒவ்வொரு பதிலடியும் எம் ஆர் ராதா வசனம்போல் அத்தனை அறிவார்ந்த நையாண்டிக் கூர்மை), குமாரசாமி என்ற யார் நடிப்பும் எடுபடவில்லை!
நாடறிந்த
வில்லன் அமித்ஷா கூட ஏதோ சொல்லுங்க எஜமான்னு கைத்தடியாகத்தான் வந்துபோனார்! அப்படி ஒரு பர்ஃபாமன்ஸ்!
தேர்தல்
முடிவுக்கு முந்தைய நாள் குமாரசாமியின் "காங்கிரஸோடு செத்தாலும் கூட்டணி இல்லை" என்ற ஆவேசப்பேட்டி தோனியின் கடைசி பால் சிக்ஸர்!
இத்தனை
கோலாகாலமும் தேர்தல் முடிவுகளில் புஷ்வாணமாய் போனதுதான் சோகம்!
இதில்
மும்பை வீதியில் பசியோடும் பயத்தோடும் சுற்றித்திரிந்த ஒரு இஸ்ரோ விஞ்ஞானியின் கதைவேறு!
கடைசியாக
ஏவப்பட்ட சேட்டிலைட் மூலம், நாட்டின் எந்த மூலையில் எந்த ஒரு ரிமோட், மொபைல், காலிங்பெல் பட்டன்களோடு, கக்கூஸ் ஃப்ளஷ் அவுட் பட்டனை தட்டினாலும் அது கர்நாடக வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜகவுக்கு ஒரு ஓட்டாக விழும் என்றிருந்ததை தேர்தல் நாளன்று காலை பத்தரை மணிக்கு கண்டுபிடித்து தான் அதன் பாஸ்வார்ட் மாற்றியதால், சங்கிகள் தன்னை வெறிகொண்டு தேடுவதாகவும், இன்று மாலைக்குள் தான் கொல்லப்படுவேன் என்றும் கதறி அழுததும், அந்த திரில்லரை எழுதியவர் அவருக்கு நான்கு இட்டிலி வாங்கிக்கொடுத்ததையும் படித்து கண்கலங்கி ஃபார்வார்ட் செய்ய மறந்ததும் வேறு தேர்தல் முடிவை ஆவலோடு எதிர்பார்க்க வைத்தது! நல்லவேளை, அவர்மட்டும்
பத்தரை மணிக்கு அதை கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால், 2G போல ஒருலட்சத்து எழுபதாயிரம் கோடி வாக்குகள் பதிவாகி எல்லோருக்கும் ஒரு நிமிஷம் அப்படியே தலை சுத்தியிருக்கும்!
இந்தமுறை
அதிசயமாய் பல கருத்துக்கணிப்புகள் எதிர்பார்த்தது போலவே
தொங்கு சட்டமன்றம் அமைய, வீறுகொண்டெழுந்தது மீடியாவும் தமிழ் சந்தும்!
அதெப்படி
சர்க்காரியா பரிந்துரைப்படி கவர்னர் முதலில் தனிப்பெரும் கட்சியை ஆட்சியமைக்க அழைக்கலாம் என்பதில் ஆரம்பித்து, இருபத்து மூன்று தொகுதிகளில் டெபாசிட் போன பாஜக எப்படி மக்களின் தேர்வாக இருக்கமுடியும், நூற்றுப்பத்து இடங்களில் டெபாசிட் போய் முன்னணியில் இருக்கும் குமாரசாமி அல்லவா மக்களின் முதல்வர் என்ற வழக்கமான விபரீத வியாக்கியானம் செய்தன!
சின்ன
முணுமுணுப்பும் வழக்கம்போல் கும்பலாக காவி சாயம் பூசி ஒழிக்கப்பட்டது
இதையே
கொஞ்சம் இப்படி கற்பனை செய்து பார்ப்போம்!
அடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக 104 சீட்டும், எடப்பாடி சாமி 74 சீட்டும், மய்யம் 52 சீட்டும் பெறுவதாக வைத்துக்கொள்வோம்! தேர்தலுக்கு முன்பு புரிந்தும் புரியாமலும் ஒருவர் மீது சேற்றை வாரி இறைத்துக்கொண்டிருந்த மையமும் இலையும் மேலிட உத்தரவால் ஒன்று சேர்ந்து ஆட்சியமைத்தால், நாம் வைக்கும் பொங்கல் எப்படி இருக்கும்?
சரி,
இணைய ஜனநாயகம் பற்றி இன்னொருநாள் பேசுவோம்!
இப்போதைக்கு
நடந்த கதைக்கு வருவோம்!
வழக்கம்போல்
விகிதாச்சார பெரும்பான்மை பற்றி ஒரு சுற்று அலசி முடித்தார்கள்!
அதன்பின்
கோவா, மணிப்பூர், மேகாலயாவில் மோடிஜி, அமித்ஜி ஆடிய சித்து விளையாட்டுக்கள் பற்றி இவர்களும் 2005 ஜார்கண்ட், 1995 குஜராத் என்று இவர்களும் லாவணி பாட, சந்து சீரழிந்தது!
ஒருவழியாக
குமாரசாமிக்கு யோகம் அடிக்க, செத்தாலும் கூட்டணி வைக்க மறுத்த காங்கிரஸ் அவரை தோளில் சுமக்கத் தயாரானது!
குமாரசாமியும்,
ரெட்டி பிரதர்ஸும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது பாவம் சீதுக்கு தெரியவில்லை!
ஆனாலும்,
ஆளுநர் என்றொரு சான்றோர் இருப்பதை மறந்துவிட்டார்கள்! அவர் தன் அதிகாரத்தை கையில் எடுத்தார்!
தேர்தல் நடக்கும்போதே பதவியேற்புக்கு நாள் குறித்த எடியூரப்பா (இயந்திரத்தின்மேல் அத்தனை நம்பிக்கை!) பதவியேற்க அழைக்கப்பட்டார்!
பெரும்பான்மையை
நிரூபிக்க வெறும் ஒரு வருடம் அவகாசம் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பை பொய்யாக்கி பதினைந்து நாள் அவகாசம் கொடுத்தார்!
ரெட்டி
சகோதரர்கள் பெட்டியை திறந்துகொண்டு ஜனநாயகம் காக்க களமிறங்க, ஜனநாயகம் சாகாமல் 104 எப்படி 112 ஆகும் என்று புரியாமல் குதிரை சந்தை திறக்கப்பட, இந்தமுறை ஏனோ நீதிமன்றம்
ஆப்கிபாருக்கு ஆப்படித்தது!
ஒரே
நாள் அவகாசம் ரெய்டு அடிக்கவோ, பேரம் பேசவோ வாய்ப்புக் கொடுக்காத நிலையில், தன் தலைவன் வழியில் கண்ணீர் மல்க உரையாற்றி ராஜினாமா செய்தார் எடியூரப்பா!
கர்நாடகாவில்
தான் கையிலெடுத்த மதவாத துருப்பு சீட்டு கைகொடுக்காத நிலையில் தற்காலிகமாக தோல்வியை ஒப்புக்கொண்டார் சந்தான பாரதி! (எனக்கு சந்தானபாரதி மேல் எந்த வெறுப்போ பகையோ இல்லை. சாயலில் இருப்பது அவர் பிழை!)
இனி,
கொள்கைக்கூட்டணி ஜனநாயகம் வென்றது என்று குதிக்கும்!
தாங்கள் செய்தது எப்படிப்பட்ட அசிங்கம் என்பதை மறந்து!
காங்கிரஸ்
தோளிலேறி சவாரி செய்து போரடிக்கும்போது குமாரசாமி எங்கு தாவுவார் என்பது கடவுளுக்கு மட்டுமல்ல, சாதாரண குடிமகனுக்கும் தெரியும்!
தாங்கள்
யாருக்கு வாக்களித்தோம்,
இப்போது தங்கள் முதல்வர் யார் என்று தமிழக மக்களோடு கர்நாடக மக்களும் ஒரே படகில் சவாரி செய்வார்கள்!
பழனிசாமிகளும்
குமாரசாமிகளும் அவரவர் அதிர்ஷ்டத்தை கொண்டாடிக் கொள்ளையடிக்க, எல்லாத் தேர்தல்களிலும்போல் மக்களும் ஜனநாயகமும் தோற்றுப்போய் வேடிக்கை பார்ப்பார்கள்!
பிரதமர்
சொன்னால், அவர் வீட்டில் துடைப்பம் எடுத்து சுத்தம் செய்வேன் என்று ஜனாதிபதி ஜெய்ல்சிங் பிரஸ் மீட்டில் பெருமையோடு சொன்ன நாட்டில் கவர்னர்கள் மத்தியில் ஆளும் கட்சிக்கு வால் பிடிக்கவும், வாய்ப்புக்கிடைத்தால் நிர்மலா தேவிகளை பிடிக்கவும் செய்வார்கள்!
அவரவர்
சார்புநிலைக்கேற்ப ஜனநாயகம் வென்றது, தோற்றது என்று கூவி அரசியல் ஓநாய்கள் தங்கள் முறைக்காக நாக்கைத் தொங்கவிட்டுக் காத்திருக்கும்!
ஜனநாயக
நெறிமுறைகள் நடுத்தெருவில் கூட்டு வன்முறை செய்யப்படும்!
ஜெய்ஹிந்த்!