பெரியாரை சொந்தம் கொண்டாட தகுதிகள் என்ன?
மிகை உணர்ச்சி முழக்கங்கள் கொஞ்சம் ஓயட்டும் என்று காத்திருந்து எழுதும் பதிவு!
துக்ளக் விழாவில் ரஜினி பேசியது என்ன, அதற்கு அவர் யார் யாரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்?
முதலில், அந்த விழாவில், ரஜினி பெரியாரை விமர்சித்தாரா?
எனில் என்ன சொன்னார்?
யாராவது சொல்லுங்களேன் - தக்க ஆதாரத்தோடு!
நான் பார்த்தவரை,
பத்திரிக்கையாளர் சோ ராமசாமியின் துணிச்சலை பாராட்டும்போது,
“சேலத்தில் நடந்த ஒரு நிகழ்வை மற்ற யாரும் பதிவு செய்யாதபோது, அவர் மட்டுமே அதை வெளியிட்டார்!”
இதுதான் அவர் சொன்னது! அந்த நிகழ்வையோ, அதை நடத்தியவரையோ அவர் விமர்சிக்கவில்லை!
அதை ஒரு தகவலாகவே அவர் கூறினார்!
அதில், ராமன் சீதை உருவத்தை ஆடையில்லாமல் எடுத்துச் சென்றார்கள், செருப்பு மாலை அணிவித்தார்கள் என்று குறிப்பிட்டார்!
மற்றபடி அது சரி என்றோ, தவறு என்றோ விமர்சிக்கவில்லை!
அப்படி ஒன்று நடக்கவே இல்லையா?
செருப்பால் தொடர்ந்து அடித்தது உண்மை என்று வீரமணி பேசிய வீடியோ, சுப. வீரபாண்டியன் மற்றும் சிலர் பேட்டி, பதிவுகள் வெளிவந்தன!
அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள் என்பதால்,
செருப்பால் அடித்தது உண்மை, பொய்யில்லை!
கடவுளர் படங்களை நிர்வாணமாக வரைந்து எடுத்துச் சென்றது உண்மை! அன்றைய முதல்வர் உட்பட பலர் வருத்தமும், கண்டனமும் தெரிவித்துள்ளார்கள்!
அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள் என்பதால்,
கடவுள் உருவங்கள் ஆடையின்றி எடுத்துச் செல்லப்பட்டது உண்மை, பொய்யில்லை!
(அதில் ராமர், சீதை படங்கள் இல்லை என்பதுதான் இவர்கள் வலியுறுத்துவதேயன்றி, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று யாருமே சொல்லவில்லை!)
அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று இவர்கள் சொன்னால், பெரியாரே இவர்களை பொய்யர்கள் என்று செருப்பாலேயே அடிப்பார்!
இந்த சம்பவம் பற்றி மற்றவர்கள் சொல்வதில் அறிந்தே செய்யும் தகவல் பிழைகளில் முக்கியமானது!
"தினமணியும் ஹிந்துவும் இந்த செய்திக்காக மன்னிப்புக் கேட்டன!"
முழுமையாக திரிக்கப்பட்ட பொய்!
அவர்கள் மன்னிப்புக் கேட்டது தீர்மானம் பற்றி வெளியிட்ட செய்திக்கு மட்டுமே!
இப்போது இவர்கள் செய்திருப்பதுதான் உண்மையான சங்கித்தனம்!
தகவல் பொய்யில்லை எனும்போது, ரஜினி எதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்?
அந்த விழாவில் அதை ஏன் பேசவேண்டும்?
அவர் உள்நோக்கம் என்ன,
என்று குதிப்பவர்கள் உள்நோக்கம் என்ன என்பதை ஊரே அறியும்!
என்று குதிப்பவர்கள் உள்நோக்கம் என்ன என்பதை ஊரே அறியும்!
அதைவிட முக்கியமான கேள்வி!
பெரியார் யாருக்கு சொந்தமானவர்?
அவரை சொந்தம் கொண்டாடும் அருகதை யாருக்கெல்லாம் உண்டு?
குறிப்பிட்ட சிலரைத் தவிர, வேறு யாருக்கும் பெரியாரைப்பற்றி பேச, சொந்தம் கொண்டாட உரிமை இல்லையா?
பெரியார் யாருக்கு சொந்தமானவர்?
தாங்களும் தங்கள் குடும்பமும் செழிக்க தன்னை நம்புவோர் உழைப்பை திருடாதவர்களுக்கு,
தன் சாதிப்பெருமை பேசாதவர்களுக்கு,
சிந்தையும் சொல்லும் செயலும் ஒன்றாய் இருப்பவர்களுக்கு,
ஊருக்கு உபதேசிப்பதை, தானும் பின்பற்றுவோருக்கு,
சக மனிதர் எல்லோரையும் சமமாக நினைப்பவருக்கு,
ஆண்டான் அடிமை நிலையை வெகுண்டு எதிர்ப்பவருக்கு!
பெரியாரின் சீர்திருத்தக் கருத்துக்களை உண்மையாக, மனப்பூர்வமாக தங்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்துவோருக்கு!
எனில், பெரியார் யாருக்கு சொந்தமானவர் என்பது சில உதாரணங்களோடு!
தன் பெயர் எவ்வளவு கெட்டாலும் பரவாயில்லை, ஆனால், தான் சிறுகச் சிறுக சேமித்த அறக்கட்டளை சொத்துக்கள் ஒரு சிலர் கைக்குப் போய்விடக்கூடாது என்று, அன்றைய சட்டம் அனுமதித்த ஒரே வழியான திருமணத்தை தன் தள்ளாத வயதில் செய்துகொண்டார் பெரியார்!
ஆனால், அது அந்தக் கைகளிலேயே போய் விழுந்ததும், அடுத்த பட்டத்துக்கு யாதவர் குல இளைய திலகம் தயாராகிவருவதும் வரலாற்றுக்கொடுமை!
சிறுமை கண்டபோதெல்லாம் தயங்காது பொங்கி எதிர்த்தவர் பெரியார்!
தன் மனம் நல்லது என்று சொல்லுவதை யாருக்கும் அஞ்சாமல் பேசியவர் பெரியார்!
அவர் பெயரை, அவர் சொத்தை, அவர் இயக்கத்தை இன்று ஆண்டு அனுபவித்துவரும் மானமிகு, ஆள்பவர் யாராயினும் அவர்களை அண்டிப்பிழைப்பதும், சமூக நீதி காத்த வீராங்கனை என்று காலில் விழுவதுமாக சுயநலப் பச்சோந்தியாக, மனமின்றி உலவுவதும், விதியன்றி வேறென்ன!
ஊருக்கெல்லாம் பகுத்தறிவு உபதேசம்! தன் வீட்டுப் பெண்களுக்கு மட்டும் வகிட்டில் குங்குமமும், தொங்கத்தொங்கத் தாலியும்!
கேட்டால் பெண்ணுரிமை, சமத்துவத்தை மதிப்பதாக கபட நாடகம்!
ஏன் அந்தப் பெண்ணுரிமையை, சமத்துவத்தை பெரியார் மணியம்மைக்குக் கொடுக்கவில்லை என்று யோசித்தால் உண்மை புரியும்!
தான் ஊருக்கு உபதேசிப்பதை,
தானும், தன்னைச் சார்ந்தோரும் கடைப்பிடிக்கவேண்டும் என்ற உண்மையான கொள்கைப்பிடிப்பு கொண்டவர் பெரியார்!
கபட வேடம், அவர் எக்காலத்தும் போடாதது!
ஊரெல்லாம் "புத்திசாலியாக" பிரச்சாரம், தன் வீட்டுப் பெண்கள் முட்டாள்களாக இருப்பது அவர்கள் உரிமை என்று பேசுவது பகுத்தறிவல்ல!
மற்றவர்கள் இதையும் நம்புவார்கள் என்ற மூடநம்பிக்கை!
அவருக்கு சற்றும் சளைக்காத தளபதிகள்!
யாரைப் பற்றி பேசும்போதும் அவர்கள் சாதியைத் தவறாது இழுத்தே பேசும் ஒரு பெரும் பேச்சாளர்!
தன் சாதிப்பெயரை விளம்பரப்படுத்தும் இரட்டை இலக்க இனிஷியல்!
குடும்ப விழாவில், பெருமையாக சுப. வீரபாண்டியன் செட்டியார் என்று போட்டுக்கொண்டு,
அதற்கு, "அதைச் செய்தது தன் அண்ணன் மகன் என்றும், அப்படிப் போடுவது அவருடைய தனிப்பட்ட உரிமை, அதில் தான் தலையிடமுடியாது" என்று அறிவாளியாக வியாக்கியானம் செய்தவர்!
இந்த "அவரது தனிப்பட்ட உரிமை" மற்ற யாருக்குமே இல்லை என்பது என்ன விதமான பகுத்தறிவும் சோஷலிசமும் என்பதை அவர்தான் விளக்கவேண்டும்!
தன் கொள்கைகளை எவ்வளவு மூர்க்கமாக பிரச்சாரம் செய்தாலும், மாற்றுக்கருத்துக் கொண்டாரை மரியாதையோடு நேசித்தவர் பெரியார்!
குன்றக்குடி அடிகளாருக்கு, ராஜாஜிக்கு அவர் கொடுத்த மரியாதையும், செலுத்திய அன்பும் அவரது இந்த இனிய குணத்துக்கு உதாரணங்கள்!
தங்களை கேள்வி கேட்பவர்களையும், விமர்சிப்பவர்களையும், அவர்கள் தனிப்பட்ட, குடும்ப வாழ்க்கை உட்பட நரகல் நடையில் விமர்சிப்பவர்கள் தங்களுக்கு பெரியார் சொந்தம் என்று சொல்ல எள்ளளவும் அருகதை அற்றவர்கள்!
அவரது கொள்கையில் உறுதியுள்ள குற்றமற்ற மனம்!
இவர்களது கொள்கையை காசுக்கு விற்ற அழுகல் மனம்!
மூட நம்பிக்கைகளை எவ்வளவு கடுமையாக விமர்சித்தபோதும், தனிப்பட்ட எவரையும் தரம் தாழ்ந்து விமர்சித்ததில்லை.
அதனால்தான் அவர் பெரியார்! இவர்கள்...
தன் தவறுகள் உட்பட அனைத்தையும் மறைக்காமல் பொதுவெளியில் ஒப்புக்கொண்ட திறந்த மனம் கொண்டவர் பெரியார்!
அந்த உயரிய குணம் இன்றைக்கு யாருக்கு இருக்கிறது?
ஒப்பனைகளற்ற, வெளிப்படையான பேச்சும் செய்கையும் எத்தனைபேரிடம் இருக்கிறது? பாரபட்சமற்று யோசித்தால் பதில் கிடைக்கக்கூடும்!
இன்னொன்று, பெண்ணுரிமை, மறுமணம் பற்றி!
சட்டம் எப்போது வந்தது, பெரியார் அதை எவ்வளவு பிரபலப்படுத்தினார் என்ற விவாதம் தேவையற்றது!
ஏனெனில், அதில் பெரியாரின் பங்களிப்பு நிகரற்றது!
பெரியாரின் அந்த சீர்திருத்தத்தை போற்றுவதான போர்வையில், ரஜினி மகளின் வாழ்க்கை வெவ்வேறு வகையாக விமர்சிக்கப்பட்டது!
நயத்தகு நாகரீகம்!
ஆனால், ரஜினி, தான் கலப்பு மனம் செய்ததையோ, (அவர் பிராமணப்பெண்ணை மணந்தால், இவர்கள் பாஷையில் அது கலப்பு மனதில் வராது), தன் மகள்களின் கலப்பு மணத்தை அங்கீகரித்து முன்னின்று நடத்திவைத்ததையோ எந்தக் காலத்திலும் தம்பட்டம் அடித்ததில்லை!
மறுமணத்தைப் பொறுத்தவரை, மகளின் விவாகரத்தின்போது உறுதுணையாக இருந்தது மட்டுமல்ல, அவரது மருமணத்தையும், ஊரெல்லாம் அழைப்பு வைத்து வெகு விமர்சையாக நடத்தியவர் ரஜினி!
மறுமணத்தை ஏதோ திருட்டுக்காரியம் செய்வதுபோல் மற்றவர்களைப்போல் ரகசியமாக நடத்தவில்லை!
தான் செய்வதை உண்மையாக உள்வாங்கி மனநிறைவோடு பகிரங்கமாய் அங்கீகரித்து செய்தவர் ரஜினி!
தன் மகளுக்கு ஒரு நல்ல தகப்பனாய், தான் செய்வதை நேர்மையோடும்
துணிவோடும் பகிரங்கமாய் செய்யும் ஒரு நல்ல மனிதராய் உயர்ந்துநின்ற தருணம் அது!
இது போல் யாராவது ஒரு பிரபலம், சீர்திருத்தச் செம்மல் செய்ததை காட்டுங்களேன் பார்ப்போம்?
பெரியாரை, அவரது கொள்கைகளை உள்வாங்கிக்கொண்டு, அதை உள்ளார்ந்த ஈடுபாட்டோடு, "தன் வாழ்வில்" பகிரங்கமாய் நடைமுறைப்படுத்தியவர் ரஜினி!
வேறெதுவும் கிடைக்காத நிலையில், தான் மனநிலை சற்று பாதிக்கப்பட்ட நிலையில் ஏர்போர்ட்டில் தகராறு செய்ததை (இதை அவரே, பலமுறை பிற்காலத்தில் வெளிப்படையாகப் பேசியிருக்கும் நிலையில்) இப்போது எடுத்துவந்து குதிக்கின்றன சில!
நல்லது!
அப்படியே, சபையர் தியேட்டர் சப் வேயில் நடந்த சம்பவம் என்ன, அதற்கு என்ன காரணம் என்று விளக்குவார்களா- இதே நேர்மையோடு?
ராமாவரம் தோட்டத்தில் அடி வாங்கியதாய் ஒரு வதந்தியை ஏதோ பக்கத்தில் நின்று பார்த்ததுபோல் இப்போது தூக்கிக்கொண்டு வருவோர் அப்படியே வேறொரு செய்தியையும் உண்மையென்று வாசிக்கட்டுமே - அது நெடுந்தொடராய் நீளும் என்பதை அறியாதவர்களா என்ன?
தன்னை மனநல மருத்துவர் என்று கூறிக்கொள்ளும் ஒருவர், ஒருமையில் இறங்கிப்பேசி தன் இருப்பைக் காட்டிக்கொள்ளும்போது வாடகைக்கதை பேசுகிறார்!
அது என்ன என்பதை, யாருக்கிடையேயான பிரச்னை என்பதை இவர்கள் அறியாதிருக்க வாய்ப்பில்லை!
அரிப்பைத் தீர்த்துக்கொள்ள பொய் பேசுவது இவர்களின் மற்ற கயமைகளோடு ஒப்பிடும்போது ஒன்றுமே இல்லை!
யாரும், யாரையும் விமர்சிக்கட்டும்,
ஆனால்,
தங்களை பெரியாரின் வாரிசுகள், தாங்கள்தான் பெரியாரைத் தாங்கிப் பிடிப்பவர்கள், தங்களுக்கு மட்டுமே பெரியார் சொந்தம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் யாரும், பெரியாரின் போதனைகளை தங்கள் வாழ்வில் இதய சுத்தியோடு பின்பற்றி, அதன்பின் மற்றவர்கள் மேல் கல்லெறியட்டும்!
பிழைப்புக்காக பெரியாரை பயன்படுத்தும் இழிபிறவிகளுக்கு, பெரியார் பெயரைச் சொல்லக்கூட தகுதியில்லை!
திடீர் பெரியார் பற்றாளர்களாய் வேஷம் போடும் இன்னொரு அடிமைக்கூட்டம் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை!
தங்கள் பதவி சுகத்துக்காகவும், கொள்ளையடித்து மூட்டைகட்டி வைத்த சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ளவும், மாநில நலன்களை, வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தை அடகுவைத்துப் பிழைக்கும் கூட்டம் விமர்சிக்கக்கூடத் தகுதியற்றது!
அவர்களை நிச்சயம் அறம் கொல்லும்!
காலம் அதைக் கண்கொண்டு பார்க்கும்!
சரி,
கேவலம், ஒரு தோற்றுப்போன கிழட்டு, மெண்டல் நடிகனின் ஒருவரிப்
பேச்சுக்கே இத்தனை உள்நோக்கங்கள் இருந்தால், தேர்ந்த அரசியல் ஞானிகளின் அளவிலா வசைபாடல்களுக்கு எத்தனை உள்நோக்கங்கள்
இருக்கும்!
செய்யாத விமர்சனத்துக்கு ஏன் இத்தனை இட்டுக்கட்டிய கூச்சல்?
அவர்களின் உள்நோக்கம் என்ன?
ஊரறிந்த ரகசியம் அது!
அதைப்பற்றி அடுத்த பதிவில்!
இது ரஜினியின் அரசியலை ஆதரிக்க முன்னோட்டப் பதிவா எனில், நிச்சயமாக இல்லை!
அவர் முதலில் வரட்டும்,
தன் கொள்கைகளை, அவற்றை நடைமுறைப்படுத்தும் திட்டங்களை அறிவிக்கட்டும்.
அப்போது அதைப்பற்றிப் பேசுவோம்!